Sunday, May 29, 2011

படைப்பு



"படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று
விடை புரியா இப்புவியில் உன்
வினாக்களை நீ தொடுத்து,
தகுந்த விடைகளை நீயே

தக்க வைத்து கொள்! என்று
"படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று

இருண்ட உலகத்தில் கருவாக
இருந்தந்த சுகங்களும், கண்ட கனாக்களும்,
இருளை விட்டு வெளிவந்த பின்
இல்லாமல் போவதும் அந்த
இறைவனின் செயலால் தான்!

அன்னையின் அரவணைப்பில்,
அழுகையையும், அச்சத்தையும்
அமிழ்த்திவிட்டு ஆனந்தித்திருப்பதும்
அந்த ஆண்டவன் ஆணையால்தான்.

பின் வரும் காலங்களில்
பிறிதொரு பிசகில்லாமல்
அவன் இட்ட விதிப்படி
அவன் நட்ட மரங்கள் (மனிதர்கள்)
வாழ்வில் பயனுறுவதும்
வாழ்வை துவக்கியவன் அருளால் தான்.

இருப்பினும் இறைவன் அமைந்திட்ட
இன்பம், துன்பம்,
ஏழ்மை, செழுமை,
ஏற்றம், இறக்கம்,
ஜனனம், மரணம்,
இது போன்ற படிகளில்,
வழுக்கி விழுந்து எழுந்து புரண்டதில்
விழுப்புண்கள் ஏராளம்! ஏராளம்!
மனக் காயங்களும் தாராளம்! தாராளம்!
மருந்திடும் மாற்றானுக்கும்
மனப் புண்ணுக்கு குறைவில்லை!

வேதனையை திரியாக்கி
வெறுப்பென்ற எண்ணெய் ஊற்றி
பற்றிலா தீப ஒளியில்,
பாழும் இவ்வுலகில் பயணித்து,
பரமனை முடிவில் சந்தித்து,
சோம்பலில்லாமல் தன் கதையை
சொல்லி அழுத போது,
சிந்திக்காமல் வாய்விட்டு
சிரித்தான் அந்த சிற்பி.

"உன்னதமான இந்த உலகத்தில்
உயர்ந்த பிறவியாய் உன்னை
அனுப்பிய போதினிலே,
அவசரமாய் சொன்னதை,
அரை குறையாய் புரிந்து கொண்டு,
அனுதினமும் நீயும் நொந்து,
அருகிலிருந்தவரையும் நோகடித்த மனிதா!
கேள்!
உன்னிடம் இல்லாத அந்த ஒன்று
அடுத்தவரிடம் இருப்பதும் உண்டு.
இல்லாத அதை தேடுவதை விடுத்து உன்னிடம்
இருக்கும் அந்த ஒன்றை விரும்பு!
வினாக்களை தொடுத்து உன்னை
விடைதேடச் சொன்னால் நீ அந்த
விடையையே வினாவாக்கி அதற்கு
விடை தேடி காலத்தை
வீணடித்திருக்கிறாய்!

மழையால் மரங்களுக்கும்,
மாந்தர்க்கும், மண்ணுக்கும் பயன்!
மழையால், மழைக்கென்ன பயன்?
ஒளியால் இருளுக்கும், இருளில்
இருக்கும் மனிதர்க்கும் பயன்!
ஒளியால் ஒளிக்கென பயன் ?

மனிதனுக்குள் மனிதனை தேடு!
மண்ணுக்கும், மற்ற மனிதனுக்கும்
மழையாகவும் ஒளியாகவும் இரு!
மனித நேயத்தில் நானிருக்கிறேன்!
மனிதாபிமானியாக நீ இரு!

அழிந்து விடும் பல செல்வங்களில்,
அழியாச் செல்வமாக இதை தருகிறேன்
என்று
அருளிய இறைவன் அந்த
அழிந்து போன உடலற்ற உயிரை,
"படைத்து விட்டான்" மீண்டும்
பாரினில் வாழ்ந்து கொள்! என்று.

No comments:

Post a Comment