Saturday, August 15, 2015

எங்களுக்கு எப்போது..?





சுதந்திரங்கள் என்றுமே உங்களுக்கு மட்டுந்தான்.!
சுற்றித் திரியும் சுகங்கள் எமக்கென்றும் இருந்ததில்லை!
எமது இனங்கள், வானிலே பறந்து வட்டமிடுவதையும்,
எட்டிப் பார்க்கும் எழுச்சியும் எமக்கிருந்ததில்லை.!
மனிதரின் பிரச்சனைக்கு தீர்வின் மருந்தாக மட்டும்
மண்ணில் வந்து சிறகின்றி அவதரித்தோமா.?
ஆயிரம் மாற்றங்கள் அனுதினமும் உருவாகியும்,
ஆண்டாண்டு காலமாய், அதற்குதானா இந்தச் சிறை.?
தெய்வங்களை நாங்கள் தினந்தோறும் ஸ்பரிசித்தும்,
தீர்வான பாதைகள் இன்னமும் திறக்வில்லை.!
சிறகுகள் இருந்தும், பறக்கப் பழகவில்லை.! உங்கள்
சிரிப்புக்கு பலியென அதை பரிசாகவே தந்து விட்டோம்.
உங்களின் காலத்தை கணிப்பது எங்கள் பணி, ஆயின்
எங்களின் காலங்ள் என்றும் கண்ணுக்கு தெரிந்ததில்லை.!
வருடங்கள் தினமும் சிறகோடு விரைவாக பறப்பதினால்,
வயோதிகங்கள் வளர்ந்தே எங்கள் வாழ்வும் முடிந்து விடும்
உங்களின் சுதந்திர தாகங்கள் தணிந்ததைப் போன்று,
எங்களின் தாகங்களும் என்றுதான் தணியுமோ?
மனமும் மார்க்கமும் உங்களுடன் அமைந்திருந்தால்,
மனதாற எங்களையும் மகிழ்வோடு மறுப்பின்றி,
சுற்றிப் பறக்க விட்டு சுதந்திரத்தின் காற்றுக்களை,
சுவாசித்து வாழ விட சற்று முயற்சித்து பாருங்களேன்.



வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் 
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.              .                
        படங்கள் : நன்றி ௬குள்