Saturday, August 6, 2016

சிறப்பு பல ( இனிப்பு ) காரங்கள்.

தமிழ் மாதங்களில்  எல்லா மாதங்களும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும் ஆடி தை மாதங்கள் அம்மனுக்கு  உகந்தவை. தை மாதத்தில் வெள்ளிக் கிழமைகள் சிறப்பு என்றால் ஆடியில் வெள்ளி, செவ்வாய் கிழமைகளும் சிறப்பு வாய்ந்தது. ஆடி வெள்ளியில் வரும் வரலஷ்மி விரதம்,  ஆடி அமாவாசை முடிந்து வரும் நாக சதுர்த்தி,  கருட பஞ்சமி போன்ற விரதங்களும் தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி போன்ற பூஜைகளும் முக்கியமானவை. இந்நாளில் விதவிதமான மலர்களோடு  ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்யும் நாம் கடவுளுக்கு பிடித்தமான பழங்கள் உணவு வகைகளையும் செய்து படைத்து விட்டு அந்த பிரசாதத்தை அனைவருக்கும்  கொடுத்து நாமும் உண்டு மகிழ்வோம்.



அப்படி கடவுளுக்கு படைக்கப்படும் உணவு வகைகளில் கொழுக்கட்டையும் பிரதான பங்கு வகிக்கும். கொழுக்கட்டைகள் செய்முறை அனேகமாக அனைவரும்  அறிந்ததே! அனைவரின்  வலைத்தளத்திலும், வலம் வந்து பிரசித்தியானவைதான். இருப்பினும் என் பங்கிற்காக நானும் அறிமுகப்படுத்துகிறேன்.

நல்ல தேங்காயாக( சற்று முதிர்ந்தது..அப்போதுதான் பூரணம் நன்றாக இருக்கும்.) ஒன்றை உடைத்து பொடிதாக துருவி வைத்துக்கொள்ளவும். 200 கிராம் பாசிப்பருப்பு எடுத்துக்கொண்டு  ( அடுப்பை பற்றவைத்துக்கொண்டு)   வெறும் கடாயில்  சற்று பொன்னிறமாக வறுத்து பின் நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடித்துக்  கொள்ளவும். அதே கடாயில் வெல்லத்தை உடைத்துப் போட்டு  ( மண்டை  வெல்லமாக இருந்தால் ஒரு உருண்டை  அளவு போதும்! இந்தப் பக்குவத்திற்கு சரியாக  இருக்கும். )  கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்ததும் அதை வடி கட்டிக்கொள்ளவும். பிறகு கடாயில் வடி கட்டிய வெல்லத்துடன் துருவிய தேங்காய் பூவை சேர்த்து  அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டேயிருக்கவும். தேங்காய் பூவும் வெல்லமும் சேர்ந்து வரும் சமயம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பாசி பருப்பு பொடியை சிறிதுசிறிதாக அதனுடன் கலந்து கிண்டி கெட்டியாகும் தருணத்தில் ஏலப்பொடி சிறிதளவு சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு வேறு பாத்திரத்தில் ரெடியான வெல்லப் பூரணத்தை மாற்றிக் கொள்ளவும். பாசிப் பருப்புக்கு பதிலாக  கடலைப் பருப்பை வறுத்து பொடி செய்தும் பூரணம் செய்யலாம். அல்லது பாதி பாதி அளவாக இரு பருப்பையும்   எடுத்துக்கொண்டு தனித்தனியே வறுத்து பொடி செய்து போடலாம். இந்த கலவையும்  ருசி நன்றாகவிருக்கும்.  நான் முக்கால்வாசி இந்த முறையில்  செய்வேன். சில பேர் பருப்புகள் எதுவும் கலக்காமல் வெறும் தேங்காய் பூரணம் மட்டும் செய்வார்கள். போளிக்கு பூரணம் செய்வது போல் கடலைப் பருப்பை வறுத்து ஊற வைத்து அரைத்து தேங்காய் வெல்லப் பூரணத்துடன் கலந்தும்  கொழுக்கட்டைகள் செய்யலாம்.

இவ்விதங்களில் ஒன்றான இரு பருப்புகளின் கலவையால் உண்டான இனிப்பு பூரணத்தை ஆறியதும் இவ்விதமாக தனிதனியே  தட்டில்  உருட்டி வைத்துக் கொள்ளவும். கொழுக்கட்டை  மேல்மாவையும் பூரணத்தையும்  ஒருசேர
தொட்டு செய்தால் கொழுக்கட்டைகள் ஒழுங்கான வடிவத்தில் வராது  சிறிது அடம்பிடிக்கும்.




இனி  கொழுக்கட்டையின் மேல் மாவு செய்யும் முறை :-

ஒரு கிலோ பச்சரிசி எடுத்து சுத்தப்படுத்தி மாவரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து மாவாக்கி அதை பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலேயே அரிசியை நன்கு  கழுவி வடிகட்டிய பின் அரைமணி நேரம்  ஈரத்துணியில் பரப்பி ஆற வைத்த பின்னர் மிக்ஸியிலேயே மாவாக்கி கொள்ளலாம். வீட்டில் விசேடங்களுக்கு  ஸ்வாமி நேவேத்தியங்களுக்கு இப்படித்தான் நான் மாவு தயாரித்துக் கொள்வேன்.

அவ்வாறு தயாரான மாவை ஒரு பங்குக்கு ஒன்றரை என்னும் அளவு விகிதத்தில் தண்ணீருடன்  சிறிதளவு பொடிஉப்பையும்  கலந்து கரைத்துக் கொள்ளவும். பின்  அடி கனமான கடாய் ஒன்றில்  இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய்  விட்டு அடுப்பில்  வைத்து சூடானாதும்  கலந்து வைத்த மாவை அதனுடன் சேர்த்து கைவிடாமல் கிண்டிக் கொண்டேயிருக்கவும். மாவு வெந்து கைகளால் தொட்டால் ஒட்டாமல் இருக்கும் பதம் வரும் போது கீழிறக்கி மாவை பாத்திரம் மாற்றி மூடி வைக்கவும்.இல்லை, ஈரத்துணியில் சுற்றி வைத்தால் இறுகி  செப்பு ( கொழுக்கட்டையின் கிண்ணங்கள்)  செய்வதற்கு வசதியாக இருக்கும்..

சிறது நேரம் கழித்து அந்த மேல் மாவை சிறு  உருண்டைகளாக  எடுத்து நல்லெண்ணெய தொட்டுக் கொண்டு இரு கை விரல்களால்  எடுத்த மாவின் நுனியை  லேசாக அமுக்கியவாறு கிண்ணங்களை தயார் செய்து கொண்டு ஆறவைத்திருக்கும் பூரண உருண்டைகளை செப்பில்  வைத்து எண்ணெய் தொட்டு நன்கு மூடி விடவேண்டும். பூரணம் வெளியில் தெரியாதபடிக்கு மாவினால் நன்கு மூடி விட வேண்டும். இல்லையென்றால்,  கொழுக்கட்டைகள் வெந்ததும் சீக்கிரமாகவே பூரணம் வேறு மாவு வேறாக பிரிந்து விடும். இதை உருண்டையாக மட்டுமின்றி, நீள வாக்கில் செப்பு செய்து நடுவில்  பூரணம் வைத்து இரு ஒரங்களையும் மடித்து பூக்கள் மாதிரி கை விரல்களால் அழுத்தியும் செய்யலாம்.






இவ்வாறு பத்து பதினைந்து கொழுக்கட்டைகள் செய்து இட்லி பானையில் வைத்து  வேக விட்டு எடுக்க வேண்டும். குக்கரில் பீரித்திலும்,  வைத்து எடுக்கலாம். கொழுக்கட்டைகள் அதிகம் வெந்து விட்டால் விரிசல் விழுந்து அதன் உருவம் மாறி விடுவதுண்டு. எனவே நேரம்  பார்த்து கவனமாக எடுத்து ஆற வைக்கவும்.




சரி! இனிப்பு கொழுக்கட்டைகள் ஒரு வழியா பண்ணி முடிச்சாச்சு!  அடுத்து காரமாக உளுந்து கொழுக்கட்டைகளை பார்ப்போமா?

இக்கொழுக்கட்டைகளுக்கும் அதே விதத்தில்தான் மேல்மாவு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பூரணம் செய்ய வெள்ளை முழு உளுந்தை நன்கு கழுவிய  பின்னர் இரண்டு மணி நேரம்  ஊற வைத்துக் கொண்டு பின் நீரை வடித்து அந்த உளுந்துடன் சிகப்பு மிளகாய்  பச்சைமளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் உப்பு முதலியவற்றை   மிக்ஸியில் போட்டு மிகவும்  நைசாகவும்  இல்லாமல் ஒரேடியாக  கரகரவென்றும் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும். கார விரும்பிகள் அவரவர்களுக்கு தேவையானபடி மிளகாய்களை கூட்டி குறைத்து வைத்துக்கொள்ளலாம்..இடையிடையே அந்த ஊறவைத்து வடித்த நீரை தெளித்துக்   கொள்ளலாம்.( அளவாக நீர்விட்டு ஊற  வைத்தால் உளுந்தின் சுவையும் சக்தியும் வீணாவதை தவிர்க்கலாம்.) இவ்வாறு   அரைத்ததை பீரித் தட்டுக்களில் சற்று எண்ணெய் தடவி இட்லி மாதிரி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்




இந்த உளுந்து இட்லிகளை சற்று ஆற வைத்த பின்.நன்கு உதிர்த்துக்கொண்டு அடுப்பில் கடாயை வைத்து ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகுபோட்டு வெடித்தவுடன் உதிர்த்து வைத்தருக்கும் பூரணத்தை சேர்த்து சிறிதளவு மஞ்சள் பொடியையும் அதனுடன் சேர்த்து மேலும் உதிராக வரும்  வரை புரட்டி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.




இப்பொழுது  தயாரித்து வைத்திருக்கும் மேல்மாவை  கிண்ணங்களாக   (செப்பு) செய்து அதனுள் ரெடியாகவிருக்கும்  பூரணத்தை சிறு ஸ்பூனினால் எடுத்து நிரப்பி இரு விளிம்புகளையும் அழுத்தி நீளமான   கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும். பின் இட்லி கொப்பரையிலேயோ  பீரித்திலோ ஆவியில் வைத்து எடுக்கவும்.




இது என் வீட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் வீட்டில் சாப்பிட ஆசைபட்டார்களே என்பதற்காக செய்த  போது  எடுத்த  படங்கள். இன்றுதான் படத்துக்கு தகுந்த பதிவாக்கினேன். பார்த்து படித்ததற்கு நன்றிகள்.



8 comments:

  1. எனக்கு ரொம்.....பப் பிடிக்கும். ஆனால் பாஸுக்கு இதில் அந்த கப் செய்ய சரியாக வராது. எனவே இது எனக்கு அதிசயப் பொருளாகிவிட்டது!! படத்தைப் பார்த்துத் திருப்திப் பட்டுக் கொள்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து கருத்துக்கள் கூறியிருப்பதற்கு, மகிழ்ச்சியுடன் கூடிய பணிவான நன்றிகள்.

      சமையல் கலையில் வல்லுனரான தங்களுக்கு கொழுக்கட்டை செப்புக்கள் செய்வது ஒருகடின செயலா? இருப்பினும், பெருந்தன்மையாய் என்னை பாராட்டியமைக்கு நன்றிகள். ( (ஆமாம் ஒரு சந்தேகம்! தங்கள் பாஸ் தமிழை தவிர்த்து பிற மொழிகள் கற்று தேர்ந்தவர்கள் என நம்புகிறேன். இல்லாவிடில் தாங்கள் இவ்விதம் எழுதியிருக்க மாட்டீர்கள் என தோன்றுகிறது. சரிதானா?)

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. நல்ல பயனுள்ள பகிர்வு சகோ.
    ஹூம் என்னால் இதனைப்பார்த்து பெருமூச்சு மட்டுமே விட முடிகின்றது இருப்பினும் மூச்சு விடும் பாக்கியத்தயாவது இறைவன் கொடுத்ததற்கு நன்றி சொல்லி விட்டு கொழுக்கட்டை இரண்டு பீஸ் எடுத்துக்கொண்டேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் உடனடி வருகை தந்து பதிவை பாராட்டி கருத்துக்கள் கூறியதற்கு மகிழ்ச்சியுடன் கூடிய பணிவான நன்றிகள்.

      மூச்சு விட கூட நேரமின்றி இருக்கும் தங்கள் அலுவலக வேலைகளுக்கு நடுவில் என் தளம் வந்து கருத்துச்சொல்லி பிரசாதத்தை உண்ண வைத்த அந்த இறைவனுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறே்ன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கொழுக்கட்டை படங்கள் கண்களை கவருகிறது சகோதரி. நிறைய செய்து வைத்திருப்பதால் தாராளமாக எடுத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.கொழுக்கட்டைகளை தாராளமாக எடுத்துக்கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ந்து என் வலைத்தளம் வந்து தங்கள் கருத்தை பகிர்ந்தால் மிகவம் மகிழ்வடைவேன்.நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. படங்கள் அழகு அக்கா....
    நல்ல குறிப்பு....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் கருத்துக்கள் என் எழுதும் ஆர்வத்தை மேன்மேலும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி!

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete